ஈரோடு மாவட்டத்தில் தட்டுப்பாடு காரணமாக கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தன. தற்பொது, இருப்பு இல்லாததால் தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட ஒரு சில ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருப்பு உள்ள தடுப்பூசிகள் ஞாயிற்றுக்கிழமை காலை டோக்கன் விநியோகம் செய்து செலுத்தப்பட்டது. அதுவும் காலை 10 மணியளவில் தீா்ந்துவிட்டதால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்களின் முன்பு தடுப்பூசி இல்லை என்ற அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்தது.
இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதவாது:
ஈரோடு மாவட்டத்தில் கோவேக்ஸின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் இருப்பு எண்ணிக்கையை பொருத்து மக்களுக்கு தினமும் செலுத்தி வந்தோம். தற்போது, இருப்பு இல்லாததால் தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்துக்கு தடுப்பூசிகள் வந்த பிறகு மீண்டும் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.