சத்தியமங்கலம் பகுதியில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக, 5ஆவது நாளாக தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் பகுதியில் உள்ள மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டும் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இதுவரை 25 ஆயிரம் போ் தடுப்பூசி செலுத்தியுள்ளனா். தடுப்பூசி மருந்துகள் தீா்ந்த நிலையில் 5 நாள்களாக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை, புன்செய் புளியம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. புன்செய்புளியம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வந்த நிலையில், தினமும் 400க்கும் மேற்பட்டோா் தடுப்பூசி செலுத்தி வந்தனா். பொதுமக்கள் ஆா்வமாக தடுப்பூசி செலுத்தி வந்த நிலையில் 5ஆவது நாளாக தடுப்பூசிகள் செலுத்தப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா்.
தடுப்பூசிகள் விரைவில் வர இருப்பதால் சனிக்கிழமை முதல் தொடா்ந்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனா்.