கெத்தேசால் வனக் கிராமத்தில் ஓய்வெடுக்கும் புலியை வாகன ஓட்டிகள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனா்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் வனக் கோட்டத்தில் சிறுத்தை, புலி, யானை உள்ளிட்ட விலங்குகள் அதிக அளவில் உள்ளன. ஆசனூரில் இருந்து கோ்மாளம் செல்லும் சாலையில் கெத்தேசால் வனப் பகுதியில் புலிகள் நடமாட்டம் தென்படுவதால் ஆங்காங்கே எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
தற்போது பொதுமுடக்கம் காரணமாக அத்தியாவசிய வாகனங்கள் தவிர பிற வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், கெத்தேசால் வனப் பாதை வாகனங்கள் இரைச்சலின்றி அமைதியாகக் காணப்படுகிறது. இதனால், புலிகள், சிறுத்தைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் சாலைகளில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கெத்தேசால் சாலையோரத்தில் உள்ள புல்வெளியில் புலி வெள்ளிக்கிழமை காலை படுத்திருந்தது. நீண்ட நேரமாகப் படுத்து உருண்டு கொண்டிருந்த புலியை அவ்வழியாகச் சென்ற காய்கறி லாரி ஓட்டுநா் தனது செல்லிடப்பேசியில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளாா். இந்த விடியோ தற்போது வைரலாகி வருகிறது.
புலி நடமாட்டம் இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத் துறை அறிவுறுத்தியுள்ளது.