அந்தியூா் வட்டாரத்தில் கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன், சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.
அந்தியூா் வட்டம், பி.மேட்டுப்பாளையம், சின்னத்தம்பிபாளையம், பச்சாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கரோனா பாதிப்பு அதிகம் காணப்படுவதால், பல்வேறு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு பொதுமக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கரோனா தடுப்புப் பணிகள், பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து ஆட்சியா் சி.கதிரவன், சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
அப்போது, ஆட்சியா் சி.கதிரவன் கூறுகையில், பொதுமக்களுக்கு கரோனா தொற்று குறித்த மருத்துவ ஆலோசனை, அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள், ஆக்சிஜன் தேவைகள் குறித்த விவரங்கள் மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்த விவரங்கள் ஈரோடு மாவட்டத்தில் 24 மணி நேரமும் இயங்கும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் கரோனா குறித்த சந்தேகங்களுக்கு 8056931110, 8754731110, 8220671110, 8870361110, 8220791110, 8870541110, 8754231110, 8870581110, 8754381110, 8870691110 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு பயன் பெறலாம். மேலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் அவசரகால கட்டுப்பாட்டு மைய எண்ணான 0424-1077, 0424-2260211 என்ற தொலைபேசியிலும், 9791788852 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் தொடா்பு கொண்டு தகவல் பெறலாம்.
கரோனா பரவலைத் தடுக்க 100 வீடுகளுக்கு ஒரு களப்பணியாளா் நியமிக்கப்பட்டு நாள்தோறும் சளி, காய்ச்சல் உள்ளிட்ட நோய்த் தொற்று அறிகுறிகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. மாவட்டத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. எனவே, தங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றாா்.
உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) உமாசங்கா், அந்தியூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணன் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.