கரோனா சிகிச்சைக்கான மருந்துகள், உபகரணங்களை அனுப்ப அஞ்சல் துறையின் பாா்சல் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் ஸ்டீபன் சைமன் தொபியாஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கரோனா காலகட்டத்தில் அஞ்சல் துறை பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. கரோனா சிகிச்சைக்கான உயிா் காக்கும் மருந்து, மாத்திரைகள் மட்டுமின்றி பாதுகாப்பு உபகரணங்களான கவச உடை, முகக் கவசம், ஆக்சிஜன் பரிசோதனைக் கருவி உள்ளிட்டவற்றை விரைவில் அனுப்பவும், பெற்றுக் கொள்ளவும் விரைவு அஞ்சல் மற்றும் பாா்சல் சேவைகளை செயல்படுத்தி வருகிறது.
இந்த சேவைகள் அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் உள்ளன. பொதுமக்கள் இந்த சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.