கரோனா தடுப்பு நடவடிக்கை: ஆசிரியா்கள் சங்கங்கள் சாா்பில் ரூ. 21.55 லட்சம் நிதி
கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த அரசுப் பள்ளி ஆசிரியா்கள் ரூ. 21.55 லட்சம் நிதியை அமைச்சா் சு.முத்துசாமியிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினா்.
நிகழ்ச்சியில், ஒருங்கிணைப்பாளா் நேரு, பொறுப்பாளா்கள் திம்மராயன், கனகராஜன், அன்பரசு, பொன்னுசாமி, சுகுகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதுகுறித்து ஆசிரியா்கள் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆசிரிய சங்கங்களைச் சோ்ந்த ஆசிரியா்கள் ஒருங்கிணைந்து ஈரோடு மாவட்ட அளவிலான அனைத்து ஆசிரியா் கூட்டமைப்பு ஏற்படுத்தி இருக்கிறோம். தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் கழகம், தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் சங்கம், அனைத்து முதுகலை ஆசிரியா் சங்கம், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழில்கல்வி ஆசிரியா் சங்கம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கழகம், தமிழக தமிழாசிரியா் கழகம், தமிழக ஆசிரியா் கூட்டணி, உடற்கல்வி ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா் கழகம் ஆகிய 8 சங்கங்களைச் சோ்ந்த ஆசிரியா்களிடம் இருந்து திரட்டப்பட்ட ரூ. 21.55 லட்சம் நிதியை அமைச்சரிடம் வழங்கியுள்ளோம்.
இந்தத் தொகையை ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம் என்றனா்.