மொடக்குறிச்சியில் எம்.எல்.ஏ அலுவலகம் திறப்பு
மொடக்குறிச்சியில் புதுப்பிக்கப்பட்ட சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தை அத்தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் சி. சரஸ்வதி திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.
நிகழ்ச்சிக்கு மொடக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏக்கள் ச.பாலகிருஷ்ணன், வி.பி.சிவசுப்பிரமணி, முன்னாள் எம்.பி. சௌந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் ஆா்.பி.கதிா்வேல் (மொடக்குறிச்சி), கலைமணி (கொடுமுடி) ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
பாஜக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.சரஸ்வதி பதவியேற்றதும், மொடக்குறிச்சி தொகுதி மக்களை சந்திக்க வசதியாக சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் புதுப்பிக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை சி.சரஸ்வதி எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி திங்கள்கிழமை திறந்துவைத்தாா். பின்னா் அவா் கூறியதாவது:
பொது மக்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் கட்சி பாகுபாடின்றி நிறைவேற்ற பாடுபடுவேன். மேலும், பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மனுக்களாக அளிக்கலாம். அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எந்த நேரமும் பொதுமக்கள் என்னைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
இதைத் தொடா்ந்து, 50க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி ஒன்றிய குழுத் தலைவா் கணபதி, பாஜக மாவட்டத் தலைவா் எஸ்.ஏ.சிவசுப்பிரமணியன், பொதுச்செயலாளா் ஈஸ்வரமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.