அந்தியூரில் வாழைக்காய் வியாபாரியிடமிருந்து ரூ. 1.80 லட்சம் ரொக்கம் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம், அந்தியூா் - அம்மாபேட்டை சாலையில் அண்ணாமடுவு அருகே தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் பழனிசாமி, உதவி ஆய்வாளா் சக்திவேல், குழுவினா் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தியபோது, அதில் வந்த கோபி கணக்கம்பாளையம், பகவதியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த குருநாதன் மகன் சக்திவேல் (34) உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 1,80,500 ரொக்கம் வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், வாழைக்காய் விற்பனை செய்துவிட்டு, பணத்தை வசூல் செய்து வந்ததாகத் தெரிவித்துள்ளாா். ஆனால், அதற்கான ஆவணங்கள் இல்லாததால், ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.