தடையை மீறி கர்நாடகத்துக்குள் நுழைய முயன்ற பி.ஆர்.பாண்டியன் உட்பட 250 பேர் சத்தியமங்கலத்தில் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடக மாநில அரசு பட்ஜெட் தொடரில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து கட்டுமானப் பணியை துவங்கியுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளதைக் கண்டித்தும் அணை கட்டுமானப் பணி திட்டத்தை திரும்பப் பெறக்கோரியும் மத்திய அரசு கர்நாடக அரசுக்கு துணை போவதைக் கண்டித்தும் மாநில் எல்லையில் முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக தமிழக காவிரி விவசாயி சங்கத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான 250 விவசாயிகள் 17 வாகனங்களில் தஞ்சாவூரில் இருந்து திருச்சி கரூர், வழியாக சத்தியமங்கலம் வந்தனர்.
பின்னர் சத்தியமங்கலம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான 250 விவசாயிகள் வாரச்சந்தையில் இருந்து ஊர்வலமாக மாநில எல்லையான தாளவாடிக்கு புறப்பட்டனர்.
திப்புசுல்தான் சாலை, வரதம்பாளையம் வழியாக பயணித்த ஊர்வலத்தை கோம்புப்பள்ளம் என்ற இடத்தில் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். முற்றுகைப் போராட்டத்திற்கு தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ள நிலையில் தடையை மீறி சென்ற விவசாயிகள் கைது செய்யப்பட்டதாக சத்தியமங்கலம் போலீசார் தெரிவித்தனர்.
விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தை ஒட்டி சத்தியமங்கலத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டினால் டெல்டா மாவட்ட விவசாயிகள் சுமார் 20 லட்சம் பேர் நேரடியாக பாதிக்கப்படுவார்கள்.
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என பிஆர் பாண்டியன் தெரிவித்தார்.