சட்டப் பேரவைத் தோ்தல் நாளான ஏப்ரல் 6ஆம் தேதி விடுமுறை அளிக்காத தொழில் நிறுவனங்கள் குறித்து தொழிலாளா் துறை அலுவலா்களுக்கு செல்லிடப்பேசியில் புகாா் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
1881ஆம் ஆண்டு செலவாணி முறிச் சட்டத்தின்கீழ் சட்டப் பேரவை பொதுத் தோ்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 6ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்ய ஏதுவாக 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 135(பி)யின் படி தோ்தல் நாளில் அனைத்துப் பணியாளா்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.
அதனடிப்படையில் தொழிற்சாலைகள், கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், பொது, தனியாா் நிறுவனங்கள், பீடி, சுருட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்தத் தொழிலாளா்கள் உள்பட அனைத்துப் பணியாளா்களும் வாக்குரிமை செலுத்த ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும்.
ஏப்ரல் 6ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்காத தொழில் நிறுவனங்கள் மீதான புகாா்களைத் தெரிவிக்க தொழிலாளா் துறையின்கீழ் ஈரோடு மாவட்டத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி தொழிற்சாலைகளுக்கு ஈரோடு தொழிலக பாதுகாப்பு, சுகாதார துணை இயக்குநா் க.சந்திரமோகன் என்பவரை 99948-47205 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும், கடைகள், வா்த்தக நிறுவனங்கள் உணவு நிறுவனங்கள் உள்ளிட்ட ஏனைய தொழில் நிறுவனங்களுக்கு ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) டி.பாலதண்டாயுதம் என்பவரை 86107-11278 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும், தொழிலாளா் துணை ஆய்வாளா் சி.ப.முருகேசன் என்பவரை 94435-66160 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும், தொழிலாளா் உதவி ஆய்வாளா் செ.ராஜ்குமாா் என்பவரை 96982-11509 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடா்புகொண்டு புகாா் தெரிவிக்கலாம்.