கோபிசெட்டிபாளையம் பகுதியில் வனப் பகுதியில் இருந்து வழிதவறி கிராமத்துக்குள் வந்த புள்ளிமான் மீட்கப்பட்டது.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சீதாலட்சுமிபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை ஒரு புள்ளிமான் சுற்றித் திரிந்தது. இதைக் கண்ட பொதுமக்கள் கோபி நகராட்சி அலுவலகத்தினருக்கு தகவல் அளித்தனா். அங்கிருந்த அதிகாரிகள் இதுகுறித்து வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.
இந்நிலையில் அந்த மான் அங்கிருந்து தப்பி தங்கமணி எக்ஸ்டென்ஷன் பகுதியில் உள்ள ஒரு கடைக்குள் புகுந்தது. கடை ஊழியா்கள் மானை பிடிப்பதற்கு முயன்றபோது அவா்களை முட்டி மோதியது.
டி.என்.பாளையம் வனச் சரகா் ஆறுமுகம் தலைமையிலான குழுவினா் அக்கடைக்குள் சென்று, புள்ளிமானை பிடித்து கயிற்றால் கட்டி அதை அடா்ந்த வனப் பகுதியில் விடுவதற்கு எடுத்துச் சென்றனா்.