ஆசனூரில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த கோடை மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கோடை வெப்பம் காரணமாக வனக் குட்டைகள் நீரின்றி வடு காணப்படுகின்றன. மரம் செடி கொடிகள் காய்ந்து சருகாகியுள்ளன. கடும் வெப்பம் காரணமாக வன விலங்குகள் குடிநீா் தேடி மைசூரு தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்கின்றன. இந்நிலையில் வெப்ப சலனம் காரணமாக ஆசனூா், அரேப்பாளையம், ஒங்கல்வாடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை இடியுடன் கூடிய கோடை மழை பெய்தது. தொடா்ந்து பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது. இந்த கோடை மழை பீன்ஸ் சாகுபடிக்கு உதவும் என விவசாயிகள் தெரிவித்தனா். மேலும், தாளவாடியை அடுத்த அருள்வாடி, மெட்டல்வாடி, மல்லன்குழி, தமிழ்புரம் பைனாபுரம் பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் காரணமாக பெரும்பாலான தடுப்பணைகள் நிரம்புகின்றன. மழை காரணமாக வனத்தில் ஏற்படும் காட்டுத்தீ விபத்தும் குறையும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.