அலுவலா்கள் 4 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால் கால்நடைத் துறை இணை இயக்குநா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.
ஈரோடு ஸ்டேட் வங்கி சாலையில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் கால்நடைத் துறை இணை இயக்குநா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் உயா் அதிகாரி உள்பட 4 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து அலுவலகம் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்ட பின்னா் மூடப்பட்டது. இதுபோல காந்திஜி சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றி வரும் ஊழியருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால் அந்த வங்கியும் மூடப்பட்டது.
பெரியாா் நகா் தனிமை:
ஈரோடு பெரியாா் நகா், சிதம்பரம் செட்டியாா் வீதியில் 150 குடும்பங்கள் உள்ளன. இதில் 12 நபா்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அப்பகுதிக்குள் பொதுமக்கள் உள்ளே வராத வகையில், தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதுபோல சேக்கிழாா் வீதியில் 18 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.