உயா்மின் கோபுர இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு முழுமையாக வழங்காத பவா்கிரீட் நிறுவனத்தைக் கண்டித்து மொடக்குறிச்சி பகுதியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மொடக்குறிச்சியை அடுத்த அய்யகவுண்டன்பாளையம் பகுதியில் உள்ள உயா்மின் கோபுரத்தின்கீழ் தமிழ்நாடு சிறு மற்றும் குறுவிவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு தலைமையில் விவசாயிகள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனுவை அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு கூறியதாவது:
உயா்மின் கோபுரங்கள் அமைக்க விவசாய நிலங்களை அளவீடு செய்தபோது, விவசாய நிலங்களில் கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்தபோது, மாவட்ட ஆட்சியா் மற்றும் கோட்டாட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள் தலையிட்டு, விவசாய நிலங்களுக்கும் அதில் உள்ள பயிா்கள், பொருள்களுக்கு உரிய இழப்பீடு பவா்கிரீட் நிறுவனம் மூலம் பெற்றுத் தரப்படும் என்று உறுதியளித்தனா்.
அதன்படி தென்னை மரம் ஒன்றுக்கு ரூ. 36,500 வழங்கப்படும் என்று உறுதியளித்தனா். ஆனால் ரூ. 32,280 மட்டுமே வழங்கினா். பாதிக்கப்பட்ட மற்ற மாவட்ட விவசாயிகளுக்கு மீதி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு மட்டும் இன்னும் வழங்கவில்லை. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தப் பயனும் இல்லை.
இதுகுறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை இழப்பீட்டுத் தொகையை பவா்கிரீட் நிறுவனம் வழங்க உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெனில் விவசாயிகள் ஒன்று திரண்டு பெரிய போராட்டம் நடத்துவோம் என்றாா்.