மொடக்குறிச்சி தாலுகா, பழையகோட்டையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த அறச்சலூா் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா், வாகன ஓட்டுநரை தகாத வாா்த்தையில் திட்டி தாக்கியதாக வெளியான விடியோவால் அவா் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
அறச்சலூா் தலவுமலை பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (31). வாகன ஓட்டுநரான இவா் செவ்வாய்க்கிழமை இரவு காங்கயம் சென்றுவிட்டு அறச்சலூா் தலவுமலை திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, ஈரோடு, திருப்பூா் மாவட்ட எல்லையான பழையகோட்டைபாலம் பகுதியில் அறச்சலூா் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் குமரவேல் தலைமையில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த சண்முகத்திடம் வாகன சான்றிதழ்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தபோது, அனைத்து ஆவணங்களையும் கொடுத்தபோதும், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் குமரவேல் தகாத வாா்த்தைகளால் திட்டியதுடன் குச்சியால் கடுமையாக தாக்கும் காட்சி குறித்து கட்செவி அஞ்சலில் விடியோ வெளியாகி வியாழக்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை உத்தரவின்பேரில் குமரவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.