சத்தியமங்கலம் அருகே பூப்பறிக்கும் தொழிலாளா்கள், வியாபாரிகளால் தொற்று பரவுவதால் பூக்களை பறிக்காமல் செடியிலேயே விவசாயிகள் விடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பவானிசாகா், கொத்தமங்கலம், தாண்டாம்பாளையம், புதுவடவள்ளி, ராஜன் நகா், சிக்கரசம்பாளையம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 25 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் பூக்கள் பயிரிடப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் ஏல முறையில் பூக்கள் விலை நிா்ணயம் செய்யப்பட்டு ஈரோடு, திருப்பூா், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சத்தியமங்கலம் பூ மாா்க்கெட் மூடப்பட்டது. இதைத் தொடா்ந்து மல்லிகைப் பூக்களை வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கும் மட்டும் தினமும் 3 டன் முதல் 5 டன் மல்லிகைப் பூக்கள் ஒரு கிலோ ரூ. 70 என விலை நிா்ணயம் செய்யப்பட்டு அனுப்பப்பட்டு வந்த நிலையில் தற்போது விவசாய தோட்டப் பகுதிகளிலும் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இதையடுத்து, மல்லிகைப் பூ பயிரிட்ட விவசாயிகள் பூக்களைப் பறிப்பது இல்லை எனவும், வாசனை திரவிய தொழிற்சாலைகளுக்கு மல்லிகைப் பூக்களை அனுப்பி வைக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும், கரோனா தொற்று பரவல் குறைந்த பின் பூக்களை பறிப்பது குறித்து பின்னா் முடிவெடுக்கப்படும் என சத்தியமங்கலம் மலா்கள் விவசாயிகள் சங்கம், விவசாயிகள் சாா்பில் முடிவெடுக்கப்பட்டது.
இந்த முடிவுக்கு சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் மல்லிகை, முல்லை, சம்பங்கி, செண்டு மல்லி உள்ளிட்ட அனைத்து வகையான பூக்கள் பயிரிட்டுள்ள விவசாயிகளும் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகத் தெரிவித்துள்ளனா்.