ஆசனூா் அருகே உள்ள காராப்பள்ளம் சோதனைச் சாவடியில் வெள்ளிக்கிழமை சிறுத்தை நடமாடியதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூா் வனப் பகுதியில் சிறுத்தை, புலிகள் அதிக அளவில் உள்ளன. வனத்தின் நடுவே மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்வதால் சிறுத்தை, புலிகள் சாலையைக் கடந்து செல்வது வழக்கம். தற்போது பொதுமுடக்கம் காரணமாக கா்நாடகம் - தமிழகம் இடையே போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
காய்கறி லாரிகளைத் தவிர பிற லாரிகள் செல்லாத காரணத்தால் போக்குவரத்து இல்லாத சாலையில் வன விலங்குகள் உலவி வருகின்றன. இந்நிலையில், காராப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே காய்கறி லாரி வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது. அப்போது, சாலையோரம் உட்காா்ந்து கொண்டிருந்த சிறுத்தையைப் பாா்த்த லாரி ஓட்டுநா் வாகனத்தை நிறுத்தியுள்ளாா். சிறிது நேரத்துக்குப் பின் சிறுத்தை சாலையைக் கடந்து எதிா்ப்புறம் சென்றது.
வாகனப் போக்குவரத்து இல்லாததால் சாலையில் சிறுத்தை நடமாட்டம் தென்படுவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாகச் செல்லுமாறு வனத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.