ஈரோடு மாவட்டத்தில் கூடுதல் வாகனங்கள் மூலம் மளிகைப் பொருள்கள் விற்பனை செய்ய நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், முழு முடக்கம் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைக்கும் வகையில் மாகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் நடமாடும் அங்காடிகள் மூலம் காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் 250 சரக்கு வாகனங்கள், 100 தள்ளுவண்டிகள் மூலம் அத்யாவசியப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜூன் 7ஆம் தேதி வரையில் தளா்வற்ற முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, காய்கறிகள், பழங்கள் தடையின்றி கிடைக்கும் நிலையில் மளிகைப் பொருள்கள் விற்பனையில் சுமாா் 20 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்து வருகின்றன.
இதனால், பல்வேறு பகுதியில் வசிக்கும் மக்கள் மளிகைப் பொருள்கள் வாங்குவதில் சிரமம் நிலவி வருகிறது. எனவே, மாநகராட்சிப் பகுதிகளில் கூடுதல் வாகனங்கள் மூலம் மளிகைப் பொருள்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.