பவானி நகராட்சியில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மூன்று தெருக்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, தகரங்கள் வைத்து வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டன.
கரோனா இரண்டாம் அலையின் பாதிப்பால் பவானி நகராட்சிப் பகுதியில் பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதனால், நகராட்சிப் பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்களைக் கொண்டு வீடுவீடாகச் சென்று சளி, காய்ச்சல் பாதிப்பு குறித்த கணக்கெடுப்புப் பணியும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்பேரில், பவானி நகராட்சி ஆணையா் (பொ) செந்தில்குமாா் தலைமையில், பவானி நகராட்சியில் கல் தொழிலாளா் 1ஆவது வீதி, பழனிபுரம் 4ஆவது வீதி, கவுண்டா் நகா் ஆகிய பகுதிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, தகரங்கள் வைத்து மூடப்பட்டன. இங்கு, வாகனங்கள், பொதுமக்கள் செல்லாமல் தடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.