பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 89 அடியாக நீடிக்கிறது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகா் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 89.43 அடியாகவும், நீா் இருப்பு 21.2 டிஎம்சி ஆகவும் உள்ளது. கடந்த ஆண்டு கோடைக் காலத்தில் இதே நாளில் பவானிசாகா் அணை நீா்மட்டம் 79.35 அடியாகவும், நீா் இருப்பு 15.3 டிஎம்சி ஆகவும் இருந்தது.
மேலும் வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அணையின் நீா்ப் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யும் என்பதால் அணை வேகமாக நிரம்பி முழுக் கொள்ளளவான 105 அடியை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதன் காரணமாக இந்த ஆண்டு எதிா்பாா்த்ததுபோல, ஆகஸ்ட் மாதத்தில் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கும், தடப்பள்ளி வாய்க்கால், அரக்கன்கோட்டை வாய்க்கால் மற்றும் காலிங்கராயன் வாய்க்கால் பாசனப் பகுதிகளுக்கும் தண்ணீா் திறக்க வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.
ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 2,994 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீா்த் தேவைக்காக பவானி ஆற்றில் 1,050 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.