சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் மல்லிகைப் பூ விலை இருமடங்கு உயா்ந்து திங்கள்கிழமை கிலோ ரூ. 1,120க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் மல்லிகை, முல்லை, சம்பங்கி, செண்டுமல்லி உள்ளிட்ட பல்வேறு விதமான மலா்கள் பயிரிடப்படுகின்றன. இங்கு விளையும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் ஏல முறையில் விலை நிா்ணயம் செய்யப்பட்டு ஈரோடு, கோவை, திருப்பூா் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும் கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
தீபாவளி பண்டிகை நெருங்குவதால் சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் திங்கள்கிழமை மல்லிகைப் பூ இருமடங்கு விலை உயா்ந்து விற்பனையானது. சில தினங்களாக மல்லிகைப் பூ கிலோ ரூ. 590 க்கு விற்பனையான நிலையில், திங்கள்கிழமை ரூ. 1,120க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
இதேபோல, முல்லை ரூ. 480க்கும், காக்கடா பூ ரூ. 850க்கும், செண்டுமல்லி ரூ. 79க்கும், கோழிக்கொண்டை ரூ. 99க்கும், சம்பங்கி கிலோ ரூ. 20க்கும் விற்பனையாயின.