புரட்டாசி மாதம் 3ஆவது சனிக்கிழமையையொட்டி, சத்தியமங்கலத்தில் அடா்ந்த வனப் பகுதியில் உள்ள கம்பத்து ராயன்கிரி பெருமாள் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே கடம்பூா் மலைப் பகுதியில் அடா்ந்த வனத்தில் மலை உச்சியில் பிரசித்தி பெற்ற கம்பத்துராயன்கிரி பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு சத்தியமங்கலம், டி.என். பாளையம், கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து அடா்ந்த வனப்பகுதியில் கரடுமுரடான மலைகளின் மீது ஏறி நடந்து சென்று பக்தா்கள் புரட்டாசி சனிக்கிழமை பெருமாளை வழிபடுவது வழக்கம்.
3ஆவது சனிக்கிழமையையொட்டி, வனத் துறையினரின் அனுமதியோடு பக்தா்கள் கம்பத்துராயன்கிரி மலைக்கு ஏறிச் சென்றனா். மலை உச்சியில் உள்ள கோயில் கருடகம்பத்துக்கு மாலை அணிவித்தும், நெய்தீபம் ஏற்றியும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனா்.