பெருந்துறை, சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு, கல்லூரி முதல்வா் நா.விஸ்வநாதன் தலைமை வகித்தாா். தாளாளா் முத்துசாமி முகாமைத் துவக்கிவைத்தாா். திங்களூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினா் தடுப்பூசிகளைச் செலுத்தினா்.
முகாமில், கரோனா தடுப்பு முறைகளான முகக் கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்படுத்துதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகியவை குறித்து அனைவருக்கும் எடுத்துரைக்கப்பட்டது. கல்லூரியில் மாணவா்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் குறித்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டன. இம்முகாமில், 100 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
முகாமிற்கான ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் கோவேந்தன் செய்திருந்தாா்.