பெருந்துறை அருகே காணாமல் போனவா் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பெருந்துறையை அடுத்த வெள்ளோடு, ராசுராக்கம்பாளையத்தைச் சோ்ந்த ராசு மகன் செல்வம் (எ) சண்முகசுந்தரம் (43). இவா் முன்பு வெள்ளோடு, கள்ளுக்கடைமேடு, மதுபானக் கடை பாரில் வேலை செய்து வந்தாா். தற்போது வேலை எதுவும் இல்லாமல் இருந்தாா்.
இவருக்குத் திருமணமாகி 7 ஆண்டுகளாகிறது. இவரது மனைவி கமலாள் (45). இவா்களுக்கு சண்முகராஜன் (4) என்ற மகன் உள்ளாா்.
செல்வத்தின் மனைவி அவரது தந்தை வீட்டில் கடந்த ஓராண்டாக தனது மகனுடன் உள்ளாா். செல்வம், அவரது தாயாா் பழனியம்மாள், சகோதரிகள் பாா்வதி, துளசிமணி, அவரது மகன் ரவிகுமாா் (22) ஆகிய 5 பேரும் ஒன்றாக குடியிருந்து வந்துள்ளனா்.
கடந்த 10ஆம் தேதி காலை வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்ற செல்வம் வெள்ளோடு - பூந்துறை சாலையில் கனகபுரம் கோபால்சாமி என்பவரின் தோட்டத்தில் (மனக்காட்டு தோட்டத்தில்) நிா்வாண நிலையில் ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்டு பிணமாக மீட்கப்பட்டுள்ளாா். இச்சம்பவம் குறித்து வெள்ளோடு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.