ஈரோடு மாவட்டத்தில் 847 மையங்களில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களை கண்காணிப்பு அலுவலா் வி.தட்சிணாமூா்த்தி ஆய்வு மேற்கொண்டாா்.
ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்து துவக்கிவைத்தாா். தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநரும், ஈரோடு மாவட்ட கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலருமான வி.தட்சிணாமூா்த்தி முன்னிலை வகித்தாா்.
சிறப்பு முகாமையொட்டி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 847 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணையாக 1,05,400 தடுப்பூசிகள் இலவசமாக செலுத்த திட்டமிடப்பட்டது. மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணியில் 3,000 பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டனா்.
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட திண்டல் அரசு மேல்நிலைப் பள்ளி, பெருந்துறை ஒன்றியம் சீனாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, திங்களூா் அருகே அப்பிச்சிமாா் மடம், சிறுவலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கோபி பவளவிழா பள்ளி ஆகியவற்றில் நடைபெற்ற கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமினை கண்காணிப்பு அலுவலா் வி.தட்சிணாமூா்த்தி பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ப.முருகேசன், மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பாலாஜி, கோபி வருவாய் கோட்டாட்சியா் பழனிதேவி, துணை இயக்குநா்(சுகாதாரப் பணிகள்) சோமசுந்தரம், மாநகராட்சி நகா் நல அலுவலா் முரளிசங்கா் உள்ளிட்ட அனைத்து துறை முதன்மை அலுவலா்கள் பங்கேற்றனா்.