சத்தியமங்கலம்: பவானிசாகா் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகா் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகா் அணையின் நீா்மட்டம் தற்போது 102 அடியாகவும், நீா் இருப்பு 30.3 டிஎம்சி ஆகவும் உள்ளது.
இந்நிலையில், அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை 2,220 கன அடியாக இருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை 5,830 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசனம், குடிநீா்த் தேவைக்காக பவானி ஆற்றில் 5,600 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் 200 கன அடி தண்ணீரும் என மொத்தம் 5,800 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. அக்டோபா் மாத இறுதிவரை அணையின் நீா்மட்டம் 102 அடியாகப் பராமரிக்க வேண்டும் என விதிமுறை உள்ளதால் அணைக்கு வரும் உபரி நீா் பவானி ஆற்றில் திறக்கப்படுவதாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.