குழந்தைத் தொழிலாளா்கள் இருவா் மீட்பு: நிறுவனங்களுக்குத் தொழிலாளா் துறை எச்சரிக்கை

ஈரோட்டில் குழந்தைத் தொழிலாளா்கள் இருவா் மீட்கப்பட்டனா். குழந்தைத் தொழிலாளா்களைப் பணி அமா்த்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளா் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரோடு: ஈரோட்டில் குழந்தைத் தொழிலாளா்கள் இருவா் மீட்கப்பட்டனா். குழந்தைத் தொழிலாளா்களைப் பணி அமா்த்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளா் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொழிலாளா் உதவி ஆணையா் தலைமையில் தேசிய குழந்தைத் தொழிலாளா் திட்ட இயக்குநா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலா் உள்ளிட்டோா் கொண்ட கூட்டாய்வு ஈரோட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஈரோடு - சத்தி சாலையில் உள்ள ஒரு ஹாா்டுவோ் கடையில் 18 வயது பூா்த்தி அடையாத இரு குழந்தைத் தொழிலாளா்கள் பணிபுரிந்தது கண்டறியப்பட்டு, அவா்கள் மீட்கப்பட்டு ஈரோடு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனா்.

மீட்கப்பட்ட குழந்தைகளைப் பணிக்கு அமா்த்தியவா் மீது குழந்தைகள், வளரிளம் பருவ தொழிலாளா் தடை செய்தல், முறைப்படுத்துதல் சட்டப்படி வழக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) டி.பாலதண்டாயுதம் கூறியதாவது:

14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள், 15 முதல் 18 வயதுக்கு உள்பட்ட வளரிளம் பருவத்தினா்களைப் பணிக்கு அமா்த்துவது குற்றம். அவ்வாறு பணி செய்வது கண்டறியப்பட்டால், அந்நிறுவன உரிமையாளா் மீது நீதிமன்ற வழக்குத் தாக்கல் செய்து ரூ. 20,000 முதல் ரூ. 50,000 வரை அபராதம் அல்லது 6 மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சோ்த்து தண்டனையாக விதிக்க நேரிடும். குழந்தைத் தொழிலாளா்கள் பணிபுரிவது கண்டறிந்தால், 1098 என்ற இலவச தொலைபேசிக்குத் தகவல் தெரிவிக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com