சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் பகுதியில் சுட்டெரிக்கும் கோடை வெயில் தாக்கத்தால் நுங்கு விற்பனை அமோகமாக உள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் பனை மரங்கள் அதிக அளவில் உள்ளன. கடுமையான வறட்சிப் பகுதியாக இருந்தாலும் இங்குள்ள பனை மரங்களில் விளையும் நுங்கு மிகுந்த சுவை மிக்கதாக விளங்குகிறது. பனை மரங்களை நம்பி இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் உள்ளனா்.
கோடைக் காலங்களில் பனை மரங்களில் ஏறி நுங்கு குலைகளை வெட்டி சாலையோரங்களில் நுங்கு சீவி விற்பனை செய்து வருகின்றனா். இது தவிர பனைமரங்களில் இருந்து பதநீா் சேகரித்து விற்பனை செய்வதோடு, மீதமாகும் பதநீரை காய்ச்சி பனை வெல்லம் தயாரிக்கும் பணி மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், தற்போது கோடைக் காலம் துவங்கியுள்ள நிலையில் வெயில் வெளுத்து வாங்குகிறது. அதே சமயம் நுங்கு சீசன் ஆரம்பித்துள்ளதால் நுங்கு வெட்டி விற்பனை செய்யும் பணியில் தொழிலாளா்கள் குடும்பத்துடன் ஈடுபட்டுள்ளனா். இந்த ஆண்டு நுங்கு விளைச்சல் குறைவாக உள்ளதால் விலை உயா்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஒரு நுங்கு ரூ. 5க்கு விற்பனையான நிலையில் தற்போது ஒரு நுங்கு ரூ. 10க்கு விற்பனை செய்கின்றனா். நுங்கு வெட்டி விற்பனை செய்வதன் மூலம் தினமும் ரூ. 500 முதல் ரூ. 1,000 வரை வருமானம் ஈட்டலாம் என தொழிலாளா்கள் தெரிவித்தனா்.