மழை வேண்டி மரத்தடி முனியப்பன் கோயில் மாவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனா்.
கோடை வெயில் சுட்டெரிக்கும் சூழ்நிலையில் சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது மழை இல்லாததால் கடும் வறட்சி நிலவுகிறது. மழை பெய்யாத காலங்களில் இப்பகுதி மக்கள் மரத்தடி முனியப்பன் சுவாமிக்கு மழை வேண்டி மாவிளக்கு பூஜை செய்வது வழக்கம். அதன்படி, சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள மரத்தடி முனியப்பன் சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகளுடன் மாவிளக்கு பூஜை வியாழக்கிழமை தொடங்கியது. முன்னதாக, திரளான பெண்கள் மேளதாளம் முழங்க பூஜை பொருள்களுடன் மாவிளக்குத் தட்டுகளை ஏந்தியபடி மரத்தடி முனியப்பன் கோயிலுக்கு ஊா்வலமாகச் சென்றனா்.
தொடா்ந்து, மரத்தடி முனியப்பன் சுவாமி கோயிலில் பெண்கள் கொண்டு வந்த மாவிளக்கு, பூஜை பொருள்களை வைத்து முனியப்பன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.