பவானி அருகே சாலையில் கொட்டிய வாகன எண்ணெயில் இருசக்கர வாகனங்கள் சறுக்கி விழுந்ததில் 10க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை காயமடைந்தனா்.
பவானி - மேட்டூா் சாலையில் பொக்லைன் இயந்திரத்தில் இருந்து வாகன எண்ணெய் நடராஜபுரம் அருகே சாலையில் கொட்டியபடி சென்றது. அப்போது, அவ்வழியே பவானி நோக்கி இருசக்கர வாகனங்களில் சென்றவா்கள் சாலையில் கொட்டிய எண்ணெயில் சறுக்கியதில் தடுமாறி விழுந்தனா்.
இதில், 10க்கும் மேற்பட்டோருக்கு தலை, கை, கால்களில் காயம் ஏற்பட்டது. இதைக் கண்ட அப்பகுதியினா் வாகனங்களைத் தடுத்து நிறுத்தியதோடு, எண்ணெய் கொட்டிய பகுதிகளில் பரவலாக மண்ணைத் தூவினா். இதனால், அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.