2 ஆண்டுகளுக்கு பின் கோலாகலம்: தண்டுமாரியம்மன் கோயில் குண்டம் விழா
சத்தியமங்கலம்: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மனின் தங்கையாக கருதப்படும் தண்டுமாரியம்மன் கோயில் குண்டம் விழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவையொட்டி கோயிலில் மிகப்பெரிய கம்பம் நடப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன.
கோயிலின் முக்கிய நிகழ்வான குண்டம் விழாவையொட்டி இன்று அதிகாலை அம்மன் அழைத்து வரம் கேட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் படைக்கலம் எடுத்து பவானி ஆற்றுக்கு சென்று புனித நீராடி கோயிலுக்கு வந்தனர்.
கோயில் முன் அமைக்கப்பட்ட குண்டத்திற்கு கற்பூரம் ஏற்றி சிறப்பு பூஜைகள் செய்து கோயில் பூசாரி கோகுல் முதலில் குண்டம் இறங்கினார். அவரைத் தொடர்ந்து மழைவாழ் மக்கள், பக்தர்கள், பள்ளி மாணவிகள், இளைஞர்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் தீ மிதித்தனர்.
இவ்விழாவையொட்டி தண்டுமாரியம்மன் 100, 200 ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோயிலில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை பொங்கல் விழா நடைபெறும்.