ஈரோடு மாவட்டத்தில் 12 முதல் 14 வயதுக்குள்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வியாழக்கிழமை துவங்கியது.
ஈரோடு மாவட்டத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல், இரண்டாம் மற்றும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
கடந்த சில நாள்களாக கரோனா பரவல் சரிவு உள்பட பல்வேறு காரணங்களினால் பள்ளிகளில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை மீண்டும் துவங்கியது.
ஈரோடு மாவட்டத்தில் 12 முதல் 14 வயதுடைய மாணவ, மாணவியரில் முதல் தவணை தடுப்பூசி 44 ஆயிரத்து 710 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 13 ஆயிரத்து 268 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
அதேபோல, 15 முதல் 18 வயதுடைய மாணவ, மாணவியரில் முதல் தவணை தடுப்பூசி 89 ஆயிரத்து 373 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 77 ஆயிரத்து 321 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் பள்ளிகளில் தடுப்பூசி செலுத்தும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதன்படி 304 பள்ளிகளில் 281 மருத்துவக் குழுவினா் 12 முதல் 15 வயதுடைய மாணவ, மாணவியருக்கு கோவேக்ஸின் மற்றும் கோா்பிவேக்ஸ் ஆகிய இரு தடுப்பூசி மருந்துகளை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தினா்.
15 முதல் 18 வயதுடைய மாணவ, மாணவியா் 20 ஆயிரத்து 103 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டு வியாழக்கிழமை மாலை வரை தடுப்பூசி செலுத்தப்பட்டது.