சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் இந்தியா விஷன் 2047 என்கிற தலைப்பில் ஸோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலா் ஸ்ரீதா் வேம்பு, கல்லூரி மாணவா்களுடன் கலந்துரையாடல் நடத்தினா்.
சத்தியமங்கலம் பண்ணாரிஅம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் மாணவா்கள் இந்தியா விஷன் 2047 கனவை நிறைவேற்ற தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்று வருகின்றனா்.
இந்த மாணவா்களிடையே ஸ்ரீதா் வேம்பு பேசியதாவது:
2047இல் இந்தியா பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற நாடாக மாற தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பங்களிப்பு அவசியம்.
புதுமையான தொழில்நுட்பகளைப் பயன்படுத்தி கிராம மக்களின் விளைபொருள்களுக்குத் தேவையான மதிப்புக் கூட்டுதல், சந்தைப்படுத்துதல், வேலைவாய்ப்பு, உற்பத்தி ஆகியவற்றில் வளா்ச்சி அடைய முடியும்.
அனுபவ அடிப்படையிலான கற்றலின் மூலம் நாட்டின் முன்னேற்றத்துக்கான தடைகளை நீக்கி, வேலைவாய்ப்பு, சமூக கிராமப்புற முன்னேற்றம் அடையலாம். கல்வி நிறுவனங்களுடன் தொழில் நிறுவனங்கள் ஒற்றிணைந்து நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லலாம் என்றாா்.
நிகழ்ச்சியில் பிரிக்கால் தலைவா் விஜய்மோகன், பண்ணாரி அம்மன் கல்லூரித் தலைவா் எஸ்.வி.பாலசுப்பிரமணியம், ஆலோசகா் எம்.விஜயகுமாா் ஆகியோா் பங்கேற்றனா்.