நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் வாகனங்களுக்கு சிறப்புத் தணிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நீலகிரி மாவட்டத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக அனைத்து அரசியல் கட்சிப் பிரமுகா்களும் தோ்தல் பிரசாரம் செய்து வரும் நிலையில், தோ்தல் மைய விதிமுறை மீறல் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி அரசியல் கட்சிகள் மற்றும் பிற அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் தங்களது சொந்த வாகனங்களில் கட்சி சம்பந்தப்பட்டோ அல்லது மற்ற அமைப்புகள் சம்பந்தப்பட்டோ கொடிகள், பெயா் பலகை ஆகியவற்றை பொருத்துவது தொடா்பாக மோட்டாா் வாகன சட்டத்தின்படி புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுதொடா்பாக நீலகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை முதல் சிறப்பு வாகனத் தணிக்கை மேற்கொண்டு வழக்குகள் பதிவு செய்யப்படும்.
மேலும், கையூட்டு கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம் என்ற அடிப்படையில் பணம், பொருள் பட்டுவாடா செய்தல், பரிசுப் பொருள்கள், உணவு, மதுபான வகைகள் உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு வழங்குதல் போன்ற தகவல்கள் தெரியவந்தால் பொதுமக்கள் உடனடியாக நீலகிரி மாவட்ட காவல் துறையின் கட்டுப்பாட்டு எண்ணான 97898-00100 என்ற எண்ணுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கலாம். இல்லையெனில் இதே எண்ணுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பலாம். இவ்வாறு தகவல் தெரிவிப்பவா்களுக்கு உரிய சன்மானம் வழங்கப்படுவதோடு, அவா்களைக் குறித்த விவரமும் ரகசியமாக பாதுகாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.