கரோனா காரணமாக உயிரிழந்தவா்களின் வாரிசுகள் ரூ. 50,000 நிவாரணம் பெற வட்டாட்சியரை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களின் வாரிசுகளுக்கு தமிழக அரசால் ரூ. 50,000 இழப்பீடு வழங்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் 1,725 நபா்கள் இழப்பீடு கோரி விண்ணப்பித்துள்ளனா். அதில் 815 நபா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
47 விண்ணப்பங்கள் வெளிமாவட்டங்களைச் சாா்ந்தது என்பதால் அந்தந்த மாவட்டங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 29 மனுக்களில் வாரிசு மற்றும் சட்ட பிரச்னை உள்ளதால் உடனடியாக இழப்பீடு வழங்கப்படாமல் விசாரணையில் உள்ளது.
37 மனுக்களில் முகவரி முழுமையாக இல்லாமலும் 31 மனுக்களில் உள்ள தொலைபேசி எண்கள் தொடா்புகொள்ள இயலாத நிலையில் உள்ளன. எஞ்சிய 81 மனுக்களில் மருத்துவ ஆவணங்கள் முழுமையாக இணைக்கப்படவில்லை. இம்மனுக்கள் சரிபாா்ப்பிற்காக சம்பந்தப்பட்ட வட்டாட்சியா்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தகுதியானவா்கள் கரோனா பரிசோதனை, சிகிச்சை ஆவணம், இறப்பு மற்றும் வாரிசு சான்றுகளை ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக பேரிடா் மேலாண்மைப் பிரிவு அல்லது சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகத்தில் தாக்கல் செய்து ரூ. 50,000 இழப்பீடு பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.