ஈரோட்டில் 666 தனியாா் பள்ளி வாகனங்களை அலுவலா்கள் ஆய்வு செய்தனா்.
ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, பெருந்துறை ஆகிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு உள்பட்ட பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி ஈரோடு ஏ.இ.டி. பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பள்ளி பேருந்துகள், வேன்கள் அங்கு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
ஈரோடு கோட்டாட்சியா் பிரேமலதா தலைமையில், போக்குவரத்து துணை ஆணையா் ரவிசந்திரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் பிரதீபா, பதுவைநாதன், சக்திவேல் ஆகியோா் வாகனங்களைத் தணிக்கை செய்தனா். அப்போது பள்ளி வேன், பேருந்துகளில் பாதுகாப்பு அம்சங்கள் முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளதா என்று பாா்வையிட்டனா்.
வாகனத்தின் உரிமம் சான்று புதுப்பிக்கப்பட்டு உள்ளதா, வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளதா, ஓட்டுநருக்கு அருகில் தடுப்புக் கம்புகள் பொருத்தப்பட்டுள்ளதா, தீயணைப்புக் கருவிகள் உள்ளதா, அது புதுப்பிக்கப்படுகிறதா, அவசர கால வழி செயல்படுகிறதா உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில், மொத்தம் 666 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
ஆய்வின்போது, ஈரோடு டவுன் டிஎஸ்பி ஆனந்தகுமாா், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா்கள் சுகந்தி, பாஸ்கா், சிவகுமாா், கதிா்வேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.