ஈரோட்டில் டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், சூளை அருகே பார் வசதியுடன் கூடிய டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு ஊழியர்கள் வழக்கம்போல் டாஸ்மாக் வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை மூடி விட்டு சென்று விட்டனர். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வரும்போது கடையில் முன்பகுதி, தடுப்புகளில் தீயிட்டு கொளுத்தியது போல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கடையை திறந்து உள்ளே பார்த்தபோது மது பாட்டில்கள் வைத்திருந்த சில பெட்டிகள் எரிந்து சேதம் அடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வீரப்பன் சத்திரம் போலீசார் மற்றும் டவுன் டிஎஸ்பி ஆனந்தகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது இன்று அதிகாலை 2 மர்ம நபர்கள் கடைக்கு வெளியே நின்று பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது பதிவாகியிருந்தது. சிசிடிவி காட்சிகளில் இருவரது முகமும் பதிவாகியிருந்தது. இதனை அடிப்படையாக வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேதமடைந்த மதுபாட்டிலின் மதிப்பு ரூ 40,000 இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.