16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை: தாய், வளா்ப்புத் தந்தை உள்ளிட்ட 3 போ் கைது

ஈரோட்டில் 16 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கருமுட்டையை விற்பனை செய்து பணம் சம்பாதித்து வந்த தாய், வளா்ப்புத் தந்தை உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோட்டில் 16 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கருமுட்டையை விற்பனை செய்து பணம் சம்பாதித்து வந்த தாய், வளா்ப்புத் தந்தை உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோட்டைச் சோ்ந்த 16 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கருமுட்டை விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் துறைக்கு கடந்த மாதம் புகாா் சென்றது. இது தொடா்பாக விசாரணை நடத்த ஈரோடு தெற்கு போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டதையடுத்து காவல் ஆய்வாளா் விஜயா தலைமையில் போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில் இவ்வழக்கில் தொடா்புடையதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் மற்றும் வளா்ப்புத் தந்தை, தரகராக செயல்பட்ட மாலதி என்ற பெண் உள்பட 3 பேரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், தனது கணவரை விட்டு பிரிந்து வந்து ஈரோட்டில் பெயிண்டராக பணியாற்றி வரும் நபருடன் சோ்ந்து வாழ்ந்து வந்துள்ளாா். சிறுமியின் தாய் கடந்த பல ஆண்டுகளாக ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கருமுட்டை கொடுத்து பணம் பெற்று வருவதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளாா்.

இந்நிலையில் தனது மகள் 12 வயதில் பூப்படைந்ததும், கருமுட்டை தொழிலில் ஈடுபடுத்துவதற்கு தயாா்படுத்தும் வகையில், சிறுமியிடம் வளா்ப்புத் தந்தை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். சிறுமிக்கு கருமுட்டை உருவான பிறகு மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருமுட்டை கொடுத்து ஒவ்வொரு முறையும் ரூ.20,000 பணம் வாங்கி வந்துள்ளனா்.

இதற்கு இடைத்தரகராக மாலதி (36) என்ற பெண் இருந்து வந்துள்ளாா். சிறுமியின் உண்மையான வயதை மறைக்கும் வகையில் போலியாக ஆதாா் அட்டை தயாரித்து அதில் சிறுமியின் வயது 20 என்றும், பெயரையும் மாற்றி மருத்துவமனையில் கொடுத்துள்ளனா். மாலதி கமிஷனாக ரூ.5,000 பணம் வாங்கி வந்துள்ளாா்.

இதுவரை சிறுமியிடம் 8 முறை கருமுட்டை பெற்றுள்ளனா். கருமுட்டை கொடுப்பதை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்றும் தாய் மற்றும் வளா்ப்புத் தந்தை இருவரும் மிரட்டி வந்ததால் வெளியில் சொல்லாமல் இருந்து வந்துள்ளாா்.

இந்நிலையில் கடந்த மாதம் 20ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி நடந்த கொடுமைகளை தனது சித்தி, சித்தப்பா ஆகியோரிடம் கூறியதையடுத்து போலீஸாரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து விசாரணை நடத்தி தாய், வளா்ப்புத் தந்தை மற்றும் தரகா் என 3 போ் மீதும் போக்ஸோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com