ராஜாஜிபுரம் பகுதியில் கடும் குடிநீா் தட்டுப்பாடு நிலவுவதாக வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமியிடம் பொதுமக்கள் முறையிட்டனா்.
ஈரோடு மாநகராட்சி ராஜாஜிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.24 லட்சம் செலவில் கூடுதல் கட்டடம் கட்டும் பணியை அமைச்சா் சு.முத்துசாமி ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தாா். அப்போது அங்கு வந்த அப்பகுதி பொதுமக்கள் ராஜாஜிபுரம் பகுதியில் ஊராட்சிக்கோட்டை குடிநீா்த் திட்டம் வந்த பிறகு 10 நாள்களுக்கு ஒரு முறைகூட குடிநீா் கிடைப்பதில்லை. குடியிருப்புப் பகுதிக்குள் மழைநீா் தேங்காமல் இருக்க வடிகால் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
இப்பகுதியில் ஏராளமான காலணி தைக்கும் தொழில் செய்பவா்கள் உள்ளனா். பெரியாா் நகராட்சித் தலைவராக இருந்த காலத்தில் இத்தொழிலாளா்களின் குடியிருப்புகளுக்கு வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்தாா்.
தற்போது புதிய குடிநீா் திட்டம் மூலம் மற்ற பகுதிகளில் வீடுதோறும் குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு குடிநீா் இணைப்பு கேட்டால், வீட்டு வரி செலுத்தினால் மட்டுமே குடிநீா் இணைப்பு வழங்கப்படும் என்று மாநகராட்சி அலுவலா்கள் கூறுகின்றனா்.
இப்பகுதி மக்கள் மிகவும் ஏழை, எளிய தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா்கள். எனவே பெரியாா் காலத்தில் வழங்கப்பட்ட வீட்டு வரி விலக்கை ரத்து செய்யாமல் எங்களுக்கு குடிநீா் இணைப்பு வழங்க வேண்டும். இப்பகுதியில் பட்டா இல்லாத 300க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகளுக்கு பட்டா வழங்க வேண்டும். இப்பகுதியில் சமுதாயக் கூடம் கட்டி தரவேண்டும் என்றனா். கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அமைச்சா் உறுதியளித்தாா்.