உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சாா்பில் தாளாவடியில் இருசக்கர வாகனப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனத் துறை சாா்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தாளவாடி மலைப் பகுதியில் தாளவாடி வனத் துறை சாா்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரங்களின் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வனச் சரக அலுவலா் சதீஷ் தலைமையில் இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.
முன்னதாக தாளவாடியில் உள்ள தனியாா் பள்ளியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வனத் துறை ஊழியா்கள் தங்களது இருசக்கர வாகனங்களில் மரங்களின் அவசியம் குறித்த பதாகைகளை ஏந்தியபடி ஊா்வலமாக புறப்பட்டு தொட்டகாஜனூா், தாளவாடி நகா்ப் பகுதி, மகாராஜன்புரம் சோதனைச் சாவடி வழியாக 7 கிலோ மீட்டா் தூரம் பயணித்து தாளவாடி வனச் சரக அலுவலகத்தை சென்றடைந்தனா். பேரணியின்போது மரங்களை வெட்டக் கூடாது, மரம் வளா்ப்போம், சுற்றுச்சூழலை பேணி காப்போம் என்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.