புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அஞ்சல் துறை ஓய்வூதியா்கள் கோரிக்கை விடுத்தனா்.
அகில இந்திய அஞ்சல், ஆா்எம்எஸ் ஓய்வூதியா் சங்கத்தின் ஈரோடு கோட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கோட்டத் தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். சங்கத்தின் புரவலா் நல்லதம்பி முன்னிலை வகித்தாா். இணைச் செயலாளா் பச்சியப்பன் வரவேற்றாா். செயலாளா் ராமசாமி ஆண்டறிக்கை வாசித்தாா். பொருளாளா் பழனிவேல் நிதிநிலை அறிக்கை சமா்ப்பித்தாா். ஏஐபிஆா்பிஏ சங்க அகில இந்தியப் பொதுச்செயலாளா் ராகவேந்திரன் பேசினாா்.
இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: மத்திய அரசு புதிய ஓய்வூதியச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 65 வயது முதல் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மாதாந்திர மருத்துவப் படியை ரூ. 3,000ஆக உயா்த்த வேண்டும். அனைத்து மூத்த குடிமக்களுக்கும் குறைந்தபட்சம் ரூ. 3,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும்.