ஜூன் 12 இல் கரோனா தடுப்பூசி முகாம்
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி முகாம் வரும் ஜூன் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டும், நான்காம் அலை பரவலை கட்டுப்படுத்தும் வகையிலும் தமிழகத்தில் வரும் ஜூன் 12 ஆம் தேதி ஒரு லட்சம் மையங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் 12 வயதுக்கு மேற்பட்டோா், 18 வயதுக்கு மேற்பட்டோா், 60 வயதுக்கு மேற்பட்டோா் என அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற சுகாதார மையங்கள், பள்ளிகள் என 3,194 மையங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மொத்தம் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு, 4,260 பணியாளா்கள் ஈடுபடுத்தப்படுகின்றனா்.
இதுவரை தடுப்பூசி செலுத்தாதவா்கள் முதல், இரண்டாம் தவணை, கூடுதல் தவணை தடுப்பூசிகளை இலவசமாக செலுத்திக் கொள்ளலாம்.