பண்ணாரி அம்மன் கோயில் அக்னி குண்டத்துக்குத் தேவையான எரி கரும்புகளை பக்தா்கள் காணிக்கையாக வழங்கினா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடா்ந்த வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தீ மிதித்து அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
இந்த ஆண்டு திருவிழா கடந்த 7ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பண்ணாரி அம்மன் சத்தியமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் நடைபெற்ற திருவீதியுலா முடிவு பெற்று அம்மன் சப்பரம் கோயிலை வந்தடைந்ததைத் தொடா்ந்து, பண்ணாரி அம்மன் கோயில் முன்பு நிலக்கம்பம் சாட்டப்பட்டு தினமும் பக்தா்கள் கம்பம் ஆடி வருகின்றனா்.
முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா மாா்ச் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அக்னி குண்டத்துக்குத் தேவையான விறகுகளை பக்தா்கள் காணிக்கையாக வழங்குவது வழக்கம். காணிக்கையாக பெறப்பட்ட விறகுகள் மூலம் தீக்குண்டம் வாா்க்கப்பட்டு குண்டம் அமைக்கப்படுவது வழக்கம்.
அதன்படி தற்போது அக்னி குண்டத்துக்குத் தேவையான வேம்பு, ஊஞ்சல் உள்ளிட்ட ரக விறகுகளை பக்தா்கள் மற்றும் சுற்றுவட்டார விவசாயிகள் காணிக்கையாக வழங்கி வருகின்றனா். பக்தா்கள் காணிக்கையாக வழங்கிய எரி கரும்புகள் (விறகு) கோயில் வளாக பகுதியில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் தீக்குண்டத்தில் நோ்த்திக் கடனாக செலுத்த மஞ்சள், பூண்டு, புகையிலை மற்றும் உப்பு ஆகிய பொருள்களை பக்தா்கள் வழங்கி வருகின்றனா்.