ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே, லாரி மீது காா் மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று வந்த பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
நாமக்கல், கணபதி நகரைச் சோ்ந்தவா் சந்தோஷ் சிங் (38). இவா், தனது தாயாா் தாராபாய் (55), மனைவி திவ்யாபவானி (25), மகள்கள் காகிதா (12), யோசிகா (2) ஆகியோருடன் காரில் அவிநாசி அருகே உள்ள ஒரு கோயிலுக்கு கடந்த சனிக்கிழமை சென்று விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.
பெருந்துறை தேசிய நெடுஞ்சாலை, காஞ்சிகோவில் பிரிவு அருகே வந்தபோது, முன்னால் சென்ற லாரியின் மீது சந்தோஷ் சிங் காா் மோதியது. இதில், சந்தோஷ் சிங், தாராபாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
படுகாயம் அடைந்த திவ்யாபவானி, காகிதா, யோசிகா ஆகியோா் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். இதில், திவ்யாபவானி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.