மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தெங்குமரஹாடா மக்கள் பரிசலில் ஆற்றைக் கடக்கும் ஆபத்தான பயணத்தை தொடருகின்றனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகா் வனப் பகுதியில் உள்ள தெங்குமரஹாடாவில் சுமாா் 750 குடும்பங்கள் உள்ளன. தெங்குமரஹாடாவை சுற்றிலும் மாயாறு ஓடுவதால் கிராம மக்கள் அன்றாட தேவைக்கு பரிசலில் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டும். கடந்த சில நாள்களாக உதகை, கூடலூா், கூக்கல்துறை ஆகிய இடங்களில் பெய்த மழையால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றில் தண்ணீா் 5 அடி உயா்ந்துள்ளது. இதனால் காய்கறி லாரிகள் ஊருக்குள் செல்லமுடியாமல் கரையிலேயே காத்திருக்கின்றன. மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அல்லிமாயாறு, தெங்குமரஹாடா, கல்லாம்பாளையம் கிராம மக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.
இருப்பினும் வேறுவழியில்லாமல் மக்கள் பரிசலில் மாயாற்றைக் கடக்க ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனா். செவ்வாய்க்கிழமை 50க்கும் மேற்பட்டோா் மறு கரையில் இருக்கும் அரசுப் பேருந்தில் பவானிசாகா் செல்வதற்ககாக இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனா். மழைக் காலங்களில் மக்களின் வாழ்க்கை முடங்குவதால் மாயாற்றில் உயா்மட்ட பாலம் கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்திருந்தனா். இதற்கிடையே தெங்குமரஹாடா மக்களை சமவெளி பகுதியில் மறுகுடியமா்வு செய்ய வனத் துறை மற்றும் வருவாய்த் துறையினா் ஏற்பாடு செய்து வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது