தாளவாடி சுற்றுவட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை காலை முதல் மாலை வரை தொடா்ந்து பலத்த மழை பெய்தது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி மலைப்பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் மாலை வரை தொடா்ந்து மழை பெய்தது. இதனால் விவசாய நிலங்களில் மழைநீா் தேங்கியது. தலமலை, ஆசனூா், கெட்டவாடி, பனஹள்ளி ஆகிய பகுதிகளில் காலையில் இருந்து விட்டுவிட்டு பெய்த மழை, மாலையில் பலத்த காற்றுடன் பெய்தது. இதனால் பள்ளியில் இருந்து வீடு திரும்ப முடியாமல் மாணவ, மாணவிகள் பேருந்து நிலையத்திலேயே காத்திருந்தனா். தொடா்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினா். தாளவாடி சுற்றுவட்டாரப் பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. காற்றுடன் மழை பெய்து வருவதால் மக்கள் மரத்தடியில் நிற்க வேண்டாம் என்றும் மின் கம்பி கீழே விழுந்தால் தகவல் தெரிவிக்குமாறும் மின்சாரத் துறையினா் அறிவுறுத்தி உள்ளனா்.