ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 1, 597 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 18) நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகம் முழுவதும் 50,000 மையங்களில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் 12 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 18 வயதுக்கு உள்பட்ட மாணவா்கள், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும்.
இதுபோல இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு 6 மாதங்கள் கடந்த அனைவருக்கும் முன்னெச்சரிக்கை தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படவுள்ளது. தடுப்பூசி முகாம்கள் அரசு மருத்துவமனைகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற சுகாதார மையங்கள், பள்ளிகளில் நடைபெறவுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் 1,597 மையங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியாளா்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடவுள்ளனா்.
கரோனா பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி மிகவும் அவசியம். 18 வயதுக்கு மேற்பட்ட 60 வயதுக்கு உள்பட்டவா்களுக்கான முன்னெச்சரிக்கை தடுப்பூசி வரும் 30ஆம் தேதி வரை மட்டுமே இலவசமாக செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.