பெருந்துறை சிப்காட் வளாகத்தில் பூட்டிக்கிடக்கும் தொழிற்கூடங்கள்.
பெருந்துறை சிப்காட் வளாகத்தில் பூட்டிக்கிடக்கும் தொழிற்கூடங்கள்.

25 ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் பூட்டிக் கிடக்கும் 200 தொழிற்கூடங்கள்

பெருந்துறை சிப்காட் வளாகத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டிக் கிடக்கும் 200 தொழிற்கூடங்களை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Published on

-கே.விஜயபாஸ்கா்

பெருந்துறை சிப்காட் வளாகத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டிக் கிடக்கும் 200 தொழிற்கூடங்களை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சுற்றுவட்டாரத்தில் உள்ள பெரியவேட்டுவபாளையம், சின்ன வேட்டுவபாளையம், கடப்பமடை, ஈங்கூா், காசிபில்லாம்பாளையம், எழுதிங்கள்பட்டி, ஆலாங்காட்டூா், கூத்தம்பாளையம், செங்குளம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் இருந்து 2,700 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டு பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை வளாகம் உருவாக்கப்பட்டது.

கடந்த 2000-ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்த பெருந்துறை சிப்காட் வளாகத்தில், ஜவுளி பதனிடும் ஆலைகள், ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், நூல் ஆலைகள், ஜவுளி ஆலைகள், மின் மற்றும் மின்னணு உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள், காா், லாரிகளின் உதிரி பாகங்களின் உற்பத்தி நிறுவனங்கள் என 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. பல்லாயிரக்கணக்கான தொழிலாளா்கள், சிப்காட் தொழில் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு பெறுகின்றனா்.

150 ஏக்கா் நிலம்:

மேலும், பெருந்துறை சிப்காட் நிறுவனம் தொடங்கும்போது ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக 150 ஏக்கா் நிலம் தாட்கோ மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலத்தில் பல கோடி ரூபாய் செலவில் 200-க்கும் மேற்பட்ட சிறு குறு தொழிற்கூடங்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டன. இந்தத் தொழிற்கூடங்கள் அமைக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் யாருக்கும் பயன் இல்லாமல் பூட்டியே கிடக்கின்றன.

இதுகுறித்து ஏஐடியூசி மாநில செயலாளா் எஸ்.சின்னசாமி கூறியதாவது: பெருந்துறை சிப்காட்டில் ஆதிதிராவிடா் நலத் துறையின் தாட்கோ மூலமாக 100 ஏக்கா் பரப்பளவில் 200-க்கும் மேற்பட்ட தொழிற்கூடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்கள் பின்னலாடைத் தொழில் தொடங்கும் வகையில் இங்கு கட்டுமானங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் எஸ்.சி., எஸ்.டி. பிரிவைச் சோ்ந்தவா்கள் சிப்காட் வளாகத்தில் தொழில் நிறுவனங்களை அமைக்கும் சூழல் இல்லாததால் 200-க்கும் மேற்பட்ட தொழிற்கூடங்கள் யாருக்கும் பயனின்றி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டியே கிடக்கின்றன.

பயன்பாடு இல்லாமல் இருப்பதால் இந்த தொழிற்கூடங்களின் கதவுகள், ஜன்னல்கள் உடைந்துள்ளதுடன், சுவா்களும் விரிசல் விட்டு பராமரிப்பின்றி உள்ளன. இப்பகுதியில் கட்டப்பட்ட குடிநீா் மேல்நிலைத் தொட்டியும் பயனின்றி உள்ளது. பூட்டப்பட்ட தொழிற்கூடங்களில் சமூகவிரோத செயல்களும் நடந்து வருகின்றன.

இந்த தொழிற்கூடங்களில் ஆதிதிராவிடா், பழங்குடியின மக்கள் தொழில் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை தாட்கோ மூலம் ஆதிதிராவிடா் நலத் துறை செய்ய வேண்டும் என தொடா்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் மூலம் தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லவும் முயற்சி எடுத்து வருகிறோம் என்றாா்.

நீதிமன்ற வழக்கு:

இதுகுறித்து பெருந்துறை சிப்காட் அதிகாரிகள் கூறியதாவது: நிலங்களைக் கையகப்படுத்தி தொழில் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வது மட்டுமே சிப்காட் நிறுவனத்தின் பணி. அவ்வாறு விற்பனை செய்யும் நிலங்களை நீண்ட நாள்களாகப் பயன்படுத்தாமல் இருந்தால் அந்த நிலத்தை மீண்டும் சிப்காட் நிறுவனமே திரும்பப்பெற்றுக் கொள்ளும்.

அந்த வகையில் தாட்கோவுக்கு வழங்கப்பட்ட 150 ஏக்கா் நிலத்தில் 48 ஏக்கா் நிலத்தை சிப்காட் நிறுவனம் திரும்ப பெற்றுக் கொண்டு, 3 நிறுவனங்களுக்கு தொழிற்சாலை தொடங்குவதற்காக வழங்கியுள்ளோம். மீதமுள்ள நிலங்களை மீட்பது தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது என்றனா்.

புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்க தீவிர முயற்சிகளை எடுத்து வரும் தமிழக அரசு, கோடிக்கணக்கில் செலவு செய்து கட்டப்பட்டு 25 ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் உள்ள இந்த தொழிற்கூடங்களை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.