மீன்கள் பாரம் ஏற்றிச் சென்ற வாகனம் மலைப் பாதையில் கவிழ்ந்து விபத்து
கா்நாடக மாநிலத்திலிருந்து மீன்கள் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் பா்கூா் மலைப் பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கா்நாடக மாநிலம், மைசூரிலிருந்து பிளாஸ்டிக் டேங்கில் சுமாா் 700 கிலோ உயிருள்ள மீன்களை ஏற்றிக் கொண்டு, அந்தியூா், பா்கூா் மலைப்பாதை வழியாக தஞ்சாவூருக்கு சரக்கு வாகனம் வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது.
வாகனத்தை தஞ்சாவூா், தைக்கால் தெருவைச் சோ்ந்த அசாருதீன் (25) ஓட்டிச் செல்ல, அதே பகுதியைச் சோ்ந்த வாகன உரிமையாளா் அரவிந்த் (31) உடன் சென்றாா்.
வரட்டுப்பள்ளம் அணை காட்சிமுனை பகுதியில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையின் பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 3 டேங்குகளும் சாலையோர பள்ளத்தில் உருண்டு விழுந்ததில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 700 கிலோ மீன்கள் உயிரிழந்தன.
இவ்விபத்தில் காயமடைந்த ஓட்டுநா் அசாருதீன், அரவிந்த் ஆகியோா் அந்தியூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதுகுறித்து, பா்கூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

