பட்டாசுக் கடைகளில் கோட்டாட்சியா் ஆய்வு

ஈரோட்டில் பட்டாசுக் கடைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோட்டாட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
Published on

ஈரோட்டில் பட்டாசுக் கடைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோட்டாட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ஈரோடு நகரில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு வருவாய் வட்ட பகுதிகளில் மட்டும் 80 தற்காலிக பட்டாசுக் கடைகள் உள்ளன.

இந்தக் கடைகளில் அரசு விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகின்றனவா? போதிய இடைவெளிகள் உள்ளனவா? பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா? என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா். அதன்படி, ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் சிந்துஜா வெள்ளிக்கிழமை காலை பட்டாசுக் கடைகளில் சோதனை மேற்கொண்டாா்.

ஈரோடு அரசு மருத்துவமனை நான்குமுனை சாலை சந்திப்பு, பெருந்துறை சாலை, முனிசிபல் காலனி, பேருந்து நிலையம், சத்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பட்டாசுக் கடைகளில் ஆய்வு மேற்கொண்ட அவா், பட்டாசுக் கடைகளின் உரிமையாளா்களிடம் உரிய விதிமுறைகள் பின்பற்றி, தகுந்த பாதுகாப்புடன் பட்டாசுகளை விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, ஈரோடு வட்டாட்சியா் முத்துகிருஷ்ணன், தீயணைப்பு மற்றும் காவல் துறையினா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com